Thursday, May 27, 2010

மதுரை


மதுரை நான் பிறந்து வளர்ந்த ஊர். சென்னையில் யாரவது உங்கள் சொந்த ஊர் என்ன என்று கேட்கும்போது மதுரை என்று சொல்லும்போதே பெருமையாக இருக்கும். இப்படிப்பட்ட மதுரையின் சிறப்புகள் பல. நான் பேசும் தமிழை வைத்தே நான் மதுரைக்காரன் என்று மற்றவர்கள் கண்டுகொள்கின்றனர். சென்னை வந்ததும் எனது உச்சரிப்புகள் சற்று மாறி உள்ளன. எனது மதுரைத்தமிழ் நிறைய பேருக்கு புரியாததே அதற்கு காரணம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் எங்கள் மதுரை. கூடல் நகர், மல்லிகை மாநகர், தூங்கா நகரம், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் மற்றும் கோவில் நகரம் என்று பல சிறப்பு பெயர்கள் கொண்டது எங்கள் மதுரை. நீண்ட நெடிய வரலாறு கொண்டது.நகரத்தின் நடுவிலும் எல்லைகளிலும் கோவில்களைக் கொண்ட ஒரே நகரம் எங்கள் மதுரை. அந்த மதுரையின் சிறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று நீண்ட கால ஆசையை இப்போது தீர்த்துக்கொள்கிறேன்.

மதுரையின் வரலாறு

தமிழ்நாட்டின் தலை சிறந்த நகரங்களில் ஒன்று மதுரை. தமிழ் நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று. சுமார் 2500 ஆண்டுகள் வரலாறு உடையது. மூவேந்தர்களில் ஒருவராம் பாண்டிய மன்னர்களின் தலை நகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்த நகரம். நான்கு சங்கங்கள் வைத்து தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்த நகரம். பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆகியோரால் ஆளப்பெற்றது. இந்து கடவுள் மீனாட்சி பிறந்த இடமாக மதுரை கருதப்படுகிறது. ஆகவேதான் உலகப்புகழ் பெற்ற இந்து சமயத்தின் முக்கிய தளமான மீனாட்சி அம்மன் கோவிலை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. மதுரை தமிழின் ஐம்ப்ருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த சுல்தான்களின் பொற்காலஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம் என்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய இருக்கிறது. தூங்கா நகரமான மதுரைக்கு அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இந்துமதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் அமைந்துள்ள ஊர்கள் உள்ளன.

இது தவிர எக்கோ பார்க், ஜிகர்தாண்டா, வைகை நதி, சித்திரை திருவிழா மற்றும் மல்லி என பல சிறப்புகள் மதுரைக்கு மட்டுமே சொந்தம். இனிவரும் பதிவுகளில் மதுரையின் சிறப்புகள் ஒவொன்றாக பார்க்கலாம்.

6 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க.....சரளமான மொழிநடை அமைந்திருக்கிறது. சில வார்த்தைப் பிரயோகங்கள் பாராட்டத் தோன்றுகின்றன. உதாரணமாக, ஆளப்பெற்றது, வீழ்ச்சியுற,......புதுச் செய்திகள் சிலவும் அறியமுடிந்தது. எழுத்துப் பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. மீண்டுமொருமுறை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. மதுரை உலக நகரங்களில் ஒன்று. மதுரை, நெல்லையின் தொன்மை சென்னைக்கும் முற்பட்டது.

    ஜிகர்தாண்டா என்றால் என்ன? இதை அடிக்கடிக் கேள்விப்படுகிறேன் சமீப நாட்களாக - பதிவர் பெயர் உட்பட.

    மதுரைக்காரரே, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. @ நன்றி சேரல்,

    எனக்கு தெரிந்த பிழைகளைத் திருத்தி உள்ளேன். வார்த்தைகளில் விளையாடும் நீங்கள் எனது வார்த்தை பிரயோகங்கள் பற்றி பேசுவது பெருமையாக உள்ளது.

    @ நன்றி அப்பாதுரை,

    மிகச்சரியாக சொன்னீர்கள் மதுரை உலக நகரங்களில் ஒன்று என்று. ஜிகர்தாண்டா என்பது மதுரையில் மட்டுமே கிடைக்கும் ஒரு சுவைமிகு குளிர்பானம். இதை பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதவுள்ளேன். சென்னையில் கூட மதுரைப்புகழ் ஜிகர்தாண்டா என்றே விற்கிறார்கள்.

    ReplyDelete
  4. "கிழக்கின் ஏதென்ஸ்"... புதிய தகவல் தோழர் ...
    தொடர்ந்து படிக்க ஆர்வமாய் இருக்கிறேன் மதுரைக்காரரே ...
    சென்ற முறை மதுரை வந்த பொது ஆரப்பாளையத்தில் ஜிகர்தண்டா குடித்தது ஞாபகத்திற்கு வருகிறது ...
    நன்றி தோழர் ...

    ReplyDelete
  5. word verification ஐ எடுத்து விட்டால் என்ன தோழர் ...

    ReplyDelete
  6. @ நன்றி நியோ,

    மஹால் அருகே ஜிகர்தாண்டா குடித்துப் பாருங்கள், இன்னும் அருமையாக இருக்கும். word verification ஐ எடுத்துவிட்டேன்.

    ReplyDelete